மதத்தின் பெயரால் நிகழும் கொடுமைகளை தோலுரிக்கும் படம்; மூக்குத்தி அம்மன் குறித்து சீமான்

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் தீபாவளி விருந்தாக ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவந்த நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்தில் உள்ள முறைகேடுகளை மட்டுமே ஆர்ஜே பாலாஜி கூறியிருப்பதாக ஒரு சில எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், இந்த படத்திற்கு நேர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் 'மூக்குத்தி அம்மன்' படத்தை பார்த்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-

மதத்தின் பெயரால் சமகாலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தைக் கொண்டு மக்களைப் பிரித்து வாக்குவேட்டையாட முற்படும் அரசியல் நாடகங்களையும் தோலுரிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் கண்டு வெகுவாக ரசித்தேன்.

மக்களை விழிப்பூட்டி எழச்செய்யும் வகையில் சமூகக்கருத்துக்களை நகைச்சுவையோடு தந்திருக்கிற இயக்குநர்கள் தம்பி ஆர்.ஜே.பாலாஜி, தம்பி என்.ஜே. சரவணன் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.