சீரியல் நடிகை சித்ராவுக்கு தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்

சீரியல் நடிகை சித்ராவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான சித்ரா, பின்னர் சீரியலில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் நடித்து வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் இவரை மேலும் பிரபலமாக்கியது. இதன்மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சித்ரா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

ரசிகர்களோ இதுவும் போட்டோஷூட் புகைப்படம் தான் என நினைத்திருக்க, அதுவோ அவரது நிச்சயதார்த்தத்திற்கு தயாரான புகைப்படமாம். பின்னர் மணமக்கள் இருவரும் மேடையில் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

சித்ராவுக்கும், ஹேமந்த் என்ற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சித்ராவின் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.