மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது!

நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார். கடந்த சில வருடங்களாக 100 கிலோவுக்கு மேல் உடல் எடை இருந்ததால் அவரது படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்ததும், இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் கூட வரவில்லை என்ற அதிருப்தி அவரது ரசிகர்களிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த கொரோனா விடுமுறையில் கேரளா சென்று உடல் எடையை 70 கிலோவாக குறைத்து சிம்பு தற்போது ஸ்லிம்மாக தோற்றமளிப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதனை அடுத்து அவர் சுசீந்திரன் இயக்கும் 'ஈஸ்வரன்' என்ற படத்தில் நடித்து அந்த படத்தை ஒருசில நாட்களில் முடித்து கொடுத்ததோடு, டப்பிங் பணியையும் முடித்து விட்டார். இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பது ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி ஆகும்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக சிம்பு நடித்து வந்த 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளது. புதுவையில் இன்று 'மாநாடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதாகவும், இந்த படப்பிடிப்பில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து மிக விரைவில் 'மாநாடு' திரைப்படத்தையும் சிம்பு நடித்து முடித்து விடுவார் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே ஹன்சிகாவுடன் சிம்பு நடித்த 'மஹா' என்ற திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது. ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் சிம்பு மீண்டும் தமிழ் திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.