தமிழ் மாணவர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்த சோனு சூட்!

திரையில் வில்லன் நடிகராக இருந்தாலும் நிஜத்தில் தற்போது ஹீரோவாக மாறி விட்டார் நடிகர் சோனு சூட். குறிப்பாக மகள்களை வைத்து ஏர் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தது, சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை இழந்து காய்கறி வியாபாரம் செய்த இளம்பெண்ணுக்கு சாப்ட்வேர் இன்ஜினியர் பணி வாங்கிக் கொடுத்தது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த பணத்தில் வாகனங்களை ஏற்பாடு செய்தது என சோனு சூட் செய்த உதவிகளை சொல்லிக்கொண்டே போகலாம்

இந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்க சென்ற தமிழ் மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களுக்காக தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்க சென்ற தமிழ் மாணவர்கள் 90க்கும் மேற்பட்டோர் நாடு திரும்ப முடியாமல் இருப்பது குறித்த செய்தி அறிந்த சோனு சூட், உடனடியாக அவர்கள் அனைவரும் தமிழகம் திரும்புவதற்காக தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த தனி விமானம் ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து கிளம்பி நேற்றிரவு சென்னைக்கு வந்து சேர்ந்தது.

இந்த விமானத்தில் மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வந்து சேர்ந்ததை அடுத்து தாய்நாடு திரும்பிய அனைத்து தமிழ் மாணவர்களும் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.