அவள் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை தயார்

பேய் படமான 'அவள்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக மிலிந்த் ராவ் தெரிவித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சண்டகோழி, சாமி, அரண்மனை உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்துள்ளது.

தற்போது இந்தியன் படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது. சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வந்துள்ளன. குறிப்பாக பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளதால் அரண்மனை படத்தின் 3-ம் பாகமும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் 'அவள்' பேய் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அவள் படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்து இருந்தனர். மிலிந்த் ராவ் இயக்கினார். இந்த படம் 2017-ல் வெளியாகி பேய் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

நல்ல வசூலும் பார்த்தது. தற்போது அவள் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக மிலிந்த் ராவ் தெரிவித்து உள்ளார். 2-ம் பாகத்திலும் சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பார்கள் என்று தெரிகிறது.