நான்கு படங்களை இயக்கி வரும் இயக்குனர் சுசீந்திரன்

தொடர்ந்து தோல்விப்படங்களாக இருந்தாலும் தற்போது 4 படங்களை தன்னம்பிக்கையுடனும், வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்துடனும் இயக்கி வருகிறார் இயக்குனர் சுசீந்திரன் என்று கோலிவுட்டில் தகவல்கள் உலா வருகிறது.

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல என தொடர் வெற்றி படங்களை இயக்கியவர் சுசீந்திரன். ஆனால், கடந்த சில வருடங்களாக அவரின் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது.

குறிப்பாக ஜீவா (2014)-வுக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கிய ஆறு படங்களுமே தோல்விதான். பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், சாம்பியன் என அனைத்து படங்களும் ரசிகர்களை கவரவில்லை.

இந்நிலையில், ஈஸ்வரன், சிவ சிவா (ஜெய் படம்), ஏஞ்சலினா, மற்றொரு ஜெய் படம் என 4 படங்களைத் தற்போது இயக்கி வருகிறார். இதில், சிம்புவை வைத்து இயக்கிய ஈஸ்வரன் படப்பிடிப்பு மட்டும் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தோல்விகளை கண்டு துவளாமல் நம்பிக்கையோடு நடைபோட்டு வரும் சுசீந்திரனுக்கு இந்த 4 படங்களும் கைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.