இயக்குனர் மகேந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு ஆடியோ வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பிறந்த நாளை இன்று கொண்டப்படுகிறது. அவரது பிறந்தநாளை தமிழ் திரையுலகமே கொண்டாடி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுகுறித்து ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

'முள்ளும் மலரும்' படத்தில் மகேந்திரன் என்னுடைய நடிப்பை புகழ்ந்து பாராட்டியபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவர் என்னுடைய மிக மிக நெருங்கிய நண்பர். ரொம்ப வித்தியாசமானவர். அவருடைய கேரக்டர் குறித்து நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பணம், பெயர், புகழ் ஆகியவை குறித்து அவர் பேசுவதே கிடையாது. அதற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்ததில்லை

தரமான படங்களை கொடுக்க வேண்டும், தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. சினிமாவை அணு அணுவாக ரசித்தவர் மகேந்திரன். சமீபத்தில் அவர் இயக்கிய 'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தை நான் பார்த்தேன். இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் ஒரு பத்து நிமிடம் நான் அமைதியாக உட்கார்ந்து விட்டேன். அதன் பிறகு என் கண்ணில் தண்ணீர் வந்தது. இவ்வளவு திறமையான இயக்குனர் இவ்வளவு சீக்கிரம் போய் விட்டாரே என்று வருத்தமாக உள்ளது.

சமீபத்தில் 'பேட்ட' படத்தில் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது காசியில் அவருடன் நிறைய நேரம் செலவிட்டேன். அவரிடம் நிறைய பேசினேன். கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இவ்வளவு சீக்கிரம் அவர் நம்மை விட்டுப் போய் விடுவார் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. இந்த பிறந்த நாளில் அவரை பற்றி நினைவு கூறுவதில் எனக்கு மகிழ்ச்சி’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.