தொலைகாட்சி தொகுப்பாளர் சுபி சுரேஷ் காலமானார்

திருவனந்தபுரம்: திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ் தனது 41வது வயதில் மரணமடைந்தார். கடுமையான கல்லீரல் செயலிழப்பு நோய்க்காக கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி ஆலுவாவிலுள்ள ராஜகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று உயிரிழந்தார்.

திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ், மலையாளத்தில் தான் நடித்த தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது டைமிங் காமெடி மற்றும் ஸ்பாண்டானியஸ் டயலாக் டெலிவரி உள்ளிட்ட திறன்களுக்காக எப்போதுமே பாராட்டுப் பெறக்கூடியவர். நகைச்சுவையான நடிப்பின் மூலம் மலையாள சினிமாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்பட்டவர்.

சில காலமாகவே கல்லீரல் தொடர்பான நோயால் அவஸ்தைப்பட்டு வந்த சுபி அதற்கான உரிய சிகிச்சைக்காக கடந்த ஜனவரியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் புதனன்று உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொச்சி கலாபவன் மூலம் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சுபி, பின்னர் தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகக் கலக்கி அத்துறையில் தனக்கென நிரந்தர ஒரு இடத்தைப் பிடித்தார்.

ராஜசேனன் இயக்கிய 'கனகசிம்மாசனம்' என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். சுபியின் மற்ற படங்களில் 'பஞ்சவர்ணதாதா', 'நாடகம்', '101 திருமணம்', 'கிருஹநாதன்', 'கிலாடி ராமன்', 'லக்கி ஜோக்கர்ஸ்', 'எல்சம்மா என்ன ஆங்குட்டி', 'தஸ்கரா லஹலா', 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒளிமயமான எதிர்காலம் கொண்ட ஒரு நம்பிக்கைக்குரிய கலைஞரை திரையுலகம் இழந்து விட்டது. என்று பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.