நன்றி... வணக்கம் என்றாலே முடிந்ததாக அர்த்தம்; விஜய் சேதுபதி தகவல்

நன்றி வணக்கம் என்று கூறிவிட்டாலே எல்லாம் முடிந்து விட்டது. அதுபற்றி பேச ஒன்றுமில்லை என 800 படம் பற்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை '800' என்கிற தலைப்பில் படமாகவுள்ளது. இதில், முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் இப்படத்தில் நடிக்க கூடாது என பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் இப்படத்திலிருந்து விலகிவிடுங்கள் என முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'நன்றி.. வணக்கம்' என பதிவிட்டுள்ளார். எனவே, 800 படத்திலிருந்து தான் விலகுவதை விஜய் சேதுபதி மறைமுகமாக அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு நேரில் சென்ற விஜய்சேதுபதி, அவரின் தாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அதன்பின் அங்கிருந்து வெளியேறிய போது, 800 படத்திலிருந்து விலகியது பற்றி அவரின் கருத்தை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு விஜய்சேதபதி 'நன்றி வணக்கம் என்று கூறிவிட்டாலே எல்லாம் முடிந்து விட்டது. அதுபற்றி பேச ஒன்றுமில்லை' என்று தெரிவித்து விட்டு சென்றார். இதனால் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.