கால்ஷீட் கொடுத்தாங்க என்றால் இறுதி கட்ட படப்பிப்பு தொடங்கும்

சென்னை: மாமன்னன் படம் குறித்து நடிகர் உதயநிதி போட்ட ட்விட்டால் பரபரப்பு எழுந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் ஃபகத் ஃபாசில் கால்சீட் வழங்கினால் மாமன்னன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என நடிகர் உதயநிதி தெரிவித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் உதயநிதி நடித்து வருகிறார். அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மாமன்னன் படப்பிடிப்பு சேலம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்கான இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நேற்று முடிவடைந்துள்ளது. இதுகுறித்த ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.

மூன்றாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்பு நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் தேதி வழங்கினால் தொடங்கப்படும் என கூறியுள்ளார். இதை பரிசீலனை செய்யுங்கள் எனவும் விளையாட்டாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் படபிடிப்பில் தொந்தரவு செய்ததற்கும், அதிக டேக் வாங்கியதற்கும் என்னை மன்னியுங்கள் என மாரி செல்வராஜிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றியடைந்தன. இதனால் தற்போது அவர் இயக்கி வரும் மாமன்னன் திரைப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தில் ஃபகத் ஃபாசில், வடிவேலு ஆகியோர் இருப்பதால் நிச்சயம் மாமன்னன் வித்தியாசமாகவும் அதேசமயம் சுவாரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது.