ரஜினி, கமல் முன்னிலையில் நடக்கிறது பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்து உள்ளது.

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-1'. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவானது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெறும் என்றும் படக்குழு அறிவித்து உள்ளது.