வாரிசு படக்குழுவினருக்கு ஏற்பட்ட அடுத்த சிக்கல்

சென்னை: அடுத்த சிக்கல் ஆரம்பம்...வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.


தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த முடிவால் விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

சென்னை அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்து வரும் வாரிசு படப்பிடிப்பின் போது உரிய அனுமதியின்றி யானைகளை அழைத்து வந்து பயன்படுத்தியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்பின்னர் போலீசார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது யானையை வாகனத்தில் அழைத்து வர மட்டுமே அனுமதி கடிதத்தை படக்குழு சமர்ப்பித்ததாக தெரிகிறது. படப்பிடிப்பில் யானையை பயன்படுத்தவதற்கான அனுமதி கடிதம் எங்களிடம் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த கடிதத்தை அவர்கள் தரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே யானையை பூஜைக்கு பயன்படுத்த மட்டுமே அழைத்து வந்ததாக படக்குழு தற்போது கூறியது. இதுதொடர்பாக உரிய ஆவனங்களை விரைவில் சமர்ப்பிப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளனர்.