இரவின் நிழல் படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை வெளியாகிறது

சென்னை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது... பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் அண்மையில் நடைபெற்றது. இதில், படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு, முதல் பாடலை வெளியிட்டார். இந்நிலையில் இந்தப்படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

தமிழ் சினிமாவில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்லீனியர் படம் என்ற பெருமைக்குரிய ’இரவு நிழல்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்தப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

தற்போது 2வது சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நாளை 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்றும் இந்த பாடலை தனது நெருங்கிய நண்பரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் கீழே அவர் திரைப்படம் முன்னேற்ற கழகத்தின் தொண்டன் என்பதை திமுக தொண்டன் என்பது போல் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.