தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய திரைப்படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாக முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன. குறிப்பாக ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், யோகிபாபுவின் காக்டையில் உள்பட பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. இன்னும் சில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அரசு நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

எனவே ஆகஸ்ட் 1முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டால் சினிமா ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகர்களின் படங்களை வழக்கம்போல் திரையரங்குகளில் கண்டுகளிப்பார்கள்.