படவாய்ப்பு கிடைக்காமல் இருக்க சதி செய்கின்றனர்... நடிகை பிரியங்கா சோப்ரா புகார்

மும்பை: இந்தி திரையுலகில் தனக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் இருக்க ஒரு கும்பல் சதி செய்ததாக நடிகை பிரியங்கா சோப்ரா புகார் தெரிவித்துள்ளார்.

‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை மணந்த இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தி திரையுலகில் தனக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் இருக்க ஒரு கும்பல் சதி செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில், “இந்தி திரையுலகில் என்னை ஒரு மூலையில் தள்ள முயன்றனர். எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்தது. அவர்களுடன் அரசியல் விளையாட முடியாது என்று தோன்றியது. அதனால் நான் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்தேன்.

அதன்பிறகு இசை ஆல்பம் தயாரிக்க அமெரிக்கா சென்றேன்.அங்கு புதிய உலகத்தில் அடியெடுத்து வைத்தேன். ஹாலிவுட்டில் பேவாட்ச்,கேண்டிகோ போன்ற படங்களில் நடித்தேன். இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். இந்தி திரையுலகில் சிலர் செய்த அரசியலை என்னால் தாங்க முடியவில்லை. அதனால்தான் இந்தி படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன்” என்றார்.

பிரியங்கா சோப்ரா குற்றச்சாட்டு பரபரப்பாகி உள்ளது. இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து வெளியேறியதற்கு பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தான் காரணம் என நடிகை கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், ஷாருக்கான் உடனான பிரியங்கா சோப்ராவின் நட்பின் காரணமாக அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற கரண் ஜோஹர் நினைத்ததாகவும் பாலிவுட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயலுக்கு கரண் ஜோஹர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.