பொய்யான தகவல்களை வெளியிட்டால் நடவடிக்கை; விஜய் தேவரகொண்டா எச்சரிக்கை

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான இருக்கும் விஜய் தேவரகொண்டா, அர்ஜூன் ரெட்டி, நோட்டா, கீதா கோவிந்தம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பூரி ஜெகந்நாத் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வரும் இந்த படத்தை கரண்ஜோஹர் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகாத நிலையில் அவரது படத்தை தங்கள் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கூறி நடிகர், நடிகை தேர்வை ஒருசில நிறுவனங்கள் செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விஜய் தேவரகொண்டா குழுவினரான நாங்கள் சில தயாரிப்பு நிறுவனங்கள் விஜய் தேவரகொண்டாவை வைத்துப் படமெடுப்பதாகவும், நடிகர் நடிகையர்களுக்கான ஆடிசன் நடைபெறுவதாகவும் பொய்யான தகவல்களை வெளியிடுவதைக் கவனித்தோம்.

விஜய தேவரகொண்டா தொடர்பான எந்தவொரு படத்தை பற்றிய அறிவிப்பை அவரோ அல்லது தயாரிப்பாளர்களோ வெளியிடுவார்கள். விஜய் தேவரகொண்டாவின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் உறுதி செய்யப்படும்.

இது போன்ற மோசடிக்காரர்களின் மேல் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதே வேளையில் அனைவரும் கவனமாகவும், வரும் தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.