இளநீரை எந்த நேரத்தில் குடிப்பது நல்லது?

இயற்கை பானங்களில் ஒன்று இளநீர், இதை விரும்பாதவர் யாருமே இருக்க முடியாது. தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். கலப்படம் செய்ய முடியாத ஒரு பொருள் என்றால் அது இளநீர் தான். இந்த பதிவில் இளநீரை எந்த நேரத்தில் குடித்தால், அதன் முழுப் பயனை அனுபவிக்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.

தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்னையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். கர்பிணி பெண்கள், இளநீரை குடித்தால், நீர்ச்சத்து குறைபாடு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீரை குடிக்கலாம். இதனால், உடற்பயிற்சி செய்வதன் பலனை அதிகரிக்கச் செய்கிறது. அதாவது நீங்கள் எந்த காரணத்திற்காக என்ன உடற்பயிற்சி செய்கிறேர்களோ, அந்த பலன், வித்தியாசம், வெகு விரைவில் தெரியும்.

மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடற்சூடு தணிக்கப்படும். மேலும், செரிமான சிக்கலை உடனடியாக சரிசெய்யும்.

இனிமையான இரவு உறக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. நமது இதயத்துடிப்பு அதிகம் இல்லாமல், நார்மலாக சாந்தமாக இருக்கச் செய்கிறது. இதனால், அன்றாட நமக்கு இருக்கும் எரிச்சல், மனச்சோர்வு, மன அழுத்தம் குறையும் .

யார் குடிக்க கூடாது?
ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.