இரவில் இந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்... ஆரோக்கியம் அதிகரிக்கும்

சென்னை: இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்... தமிழில் ஒரு பழமொழி உண்டு. காலை அரசன் போல், மதியம் மந்திரி போல், இரவு யாசகன் போல் சாப்பிட வேண்டுமென்பதுதான் அது. இரவு சிறிதளவுதான் சாப்பிட வேண்டுமென்றாலும் அந்த உணவில் கவனம் செலுத்த வேண்டும்.


பலர் இரவில் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. பொதுவாக, இரவு எட்டு மணிக்குள் சாப்பிடுபவர்களின் உடல் நலம் சீரான ஆரோக்கியத்திற்குள் இருப்பதாகவும், செரிமானமும் சீராக நடைபெறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் நிறைய பேர் இரவு உணவை தாமதமாகத்தான் உட்கொள்கிறார்கள். நள்ளிரவில் எழுந்து பசியை போக்குபவர்களும் இருக்கிறார்கள். ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும் சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது.


இரவு நேரத்தில் மாமிச உணவுகளை சாப்பிட்டால் செரிமானம் மெதுவாக நிகழும். உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அது குறைத்துவிடும். மேலும் உடல் உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தவும் செய்யும். இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக்கத்தை விட குறட்டை சத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துவார்கள். இதனால் அவருடன் உறங்குபவர்களுக்கும் அது பிரச்னை. எனவே இறைச்சி உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

ஐஸ்க்ரீம் எப்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை விரும்பப்படும் உணவு. இரவு விருந்துக்கு செல்பவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்கிரீமை விரும்பி ருசிக்கும் வழக்கம் பரவலாக நடைமுறையில் இருக்கிறது. அதில் அதிக அளவு கொழுப்பும், சர்க்கரையும் கலந்திருக்கிறது. இவை இரவு நேரத்தில் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும்.

இதேபோல் சாக்லேட்டில் இருக்கும் காபினும், ஊட்டச்சத்துக்களும் இதயத்திற்கு நலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும்.

பசியுடன் இருக்கும் சமயத்தில் பாஸ்தா சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை சேர்க்கும். ஆனால் இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும். அதனால் உடல் எடையும் அதிகரிக்கக்கூடும். உடலில் கார்போஹைட்ரேட் அளவை உயர்த்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.