நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழைப்பழம்

சென்னை: முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் விட்டமின்கள், பொட்டாசியம், கனிமம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூவன் வாழை, செவ்வாழை, ரஸ்தாளி வாழை, பச்சை வாழை, பேயன் வாழை, ஏலக்கி, மலை வாழை , நேந்திரம், மட்டி என்று வாழை பழங்கள் பல வகைகளில் உள்ளன. மழைக்காலம், கோடைகாலம் என்று எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை யாரெல்லாம் எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவது உகந்தது அல்ல. குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என்பதால் இரவு நேரத்தில் தர மாட்டார்கள். அதேபோல் நோய் உள்ளவர்களும், வயதானவர்களும் வாழைப்பழத்தினை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது.

சைனஸ், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மாலை அல்லது மதிய வேளையில் வாழைப்பழம் சாப்பிடலாம். மாலை வேளையில் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சிற்றுண்டியை தவிர்த்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் எளிதாகவும் ஆரோக்கியமாகவும் உடல் எடையை குறைக்கலாம்.