காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள்..

தினமும் அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலை நாள் முழுவதும் சோம்பல் இன்றி புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி இன்றியமையாததாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஜிம்மிற்கு சென்று கடின உடற்பயிற்சி தான் செய்ய வேண்டும் என்பதில்லை, மாறாக 40 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி, சிறிய உடற்பயிற்சிகள், மூச்சு பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், ஓடுதல் போன்ற ஏதேனும் ஒன்றை தினமும் நம்முடைய வழக்கமாக்கி கொள்ளலாம். இதுபோன்ற பயிற்சிகளை நாம் மாலை நேரங்களில் செய்வதை காட்டிலும் அதிகாலை நேரத்தில் செய்வதே சிறந்தது என்று கூறப்படுகிறது.

நாம் காலை தூங்கி எழும்போது நம்முடைய உடல் தசைகள் இலகுவகாக இருக்கும், அந்த சமயத்தில் நாம் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு அதீத நன்மைகளை தரும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் தான் அன்றைய நாள் நம்முடைய உடல் சோம்பல் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்கும். உடலுக்கு புத்துணர்வு அளிப்பதுடன் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது, ரத்த ஓட்டம் உடலில் சீராக இருந்தால் எவ்வித உடல் உபாதையும் ஏற்படாது, அதோடு இதய ஆரோக்கியமும் மேம்பாடு அடையும்.மேலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் வியர்வையாக வெளியேறி உடல் பருமனை குறைக்கவும் உதவும்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியாகுவதால் உடலும், முகமும் பொலிவடைகிறது. தினமும் உடற்ப்பயிற்சி செய்து வந்தால் முதுமை காரணமாக ஏற்படும் மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற எந்தவிதமான தொந்தரவுகளும் முதுமை காலத்தில் ஏற்படாது. காலையில் செய்யும் உடற்பயிற்சி நம்முடைய சுறுசுறுப்பிற்கு முக்கியமான காரணமாக அமைகிறது. இதன்மூலம் மூளை செயல்பாடு அதிகரித்து அதிக நினைவாற்றலை ஏற்படுத்துகிறது, பலவித ஹார்மோன்களையும் தூண்டி நம்மை ஆரோக்கியமாக செயல்பட இவை உதவுகின்றன.