உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?

ஒருவர் சரியான உயரத்தில் இல்லாமல் இருப்பதற்கு சிறு வயதிலேயே எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாமல் இருப்பது ஒரு காரணம். ஏனெனில் சிறு வயதிலேயே நாம் எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான உணவுகளை உட்கொள்ளாவிட்டால், பின் எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், வளர்ச்சியானது திடீரென்று நின்றுவிடும்.

கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் சேர்த்து வர வேண்டும். இந்த பதிவில் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை தெரிந்துகொள்வோம்.

அனைவருக்குமே பாலில் கால்சியம் அதிகம் உள்ளது என்று தெரியும். ஆகவே அத்தகைய பாலை தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளை குழந்தைகளுக்கு மறக்காமல் கொடுக்க வேண்டும். இதனால் அவர்களின் எலும்பு மட்டுமின்றி, பற்களும் வலுவுடன் வளரும்.

பால் பொருட்களில் ஒன்று சீஸ். இன்றைய காலத்தில் அனைத்து குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் பிடித்த உணவுப் பொருளாக உள்ளது. இருப்பினும் இதனை அளவாக கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், குழந்தைகளின் உடல் எடை அளவுக்கு அதிகமாகிவிடும். தயிரும் பால் பொருட்களில் ஒன்று. ஆகவே தினமும் அவர்களின் உணவில் தயிரை மறக்காமல் சேர்த்து வாருங்கள்.

குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை வேக வைத்து கொடுத்து வந்தால், கால்சியம் சத்து மட்டுமின்றி, புரோட்டீன், வைட்டமின் டி போன்ற சத்துக்களும் வளமாக கிடைக்கும். ப்ராக்கோலியில் கூட எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் உள்ளது. ஆகவே இதனையும் குழந்தைகளின் டயட்டில் சேர்த்து வாருங்கள்.

பொதுவாக மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மட்டும் தான் உள்ளது என்று தெரியும். ஆனால் மத்தி மீனில் கால்சியமும் அதிகம் உள்ளது. எனவே இதனை வாரம் 1-2 முறை குழந்தைகளின் உணவில் சேர்த்து வாருங்கள்.

பசலைக்கீரையில் எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. இவற்றில் மட்டுமின்றி அனைத்து கீரைகளிலும் கால்சியம் உள்ளது. ஆகவே வாரத்திற்கு மூன்று முறை குழந்தைகளுக்கு கீரைகளை சமைத்து கொடுங்கள்.

சில குழந்தைகளுக்கு லாக்டோஸ் இன்டாலரன்ஸ் பிரச்சனை இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு பாலுக்கு பதிலாக சோயா பால் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஐஸ் க்ரீம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் பெற்றோர்கள் இதனை சாப்பிட கொடுக்கமாட்டார்கள். இருப்பினும் ஐஸ் க்ரீம் பாலில் செய்யப்படுவதால், இதனை குழந்தைகளுக்கு அளவாக கொடுப்பதில் எந்த தவறும் இல்லை.