உடற்பயிற்சி செய்யும் வழிமுறைகளும், உணவுமுறைகளும்

உடல் அமைப்புக்கும் உடற்பயிற்சிக்கும் சம்பந்தம் கிடையாது. அதாவது, எடையைக் குறைப்பதற்காகவோ அதிகரிப்பதற்காகவோ உடற்பயிற்சி பயன்படாது. ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இயங்குவதற்கே உடற்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்னும் அமிலம் நமது உடலில் சுரக்கும். இது உடலுக்குப் புத்துணர்வை ஏற்படுத்துவதால் அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.

காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே அனைத்து வகையிலும் நன்மை பயக்கக்கூடியதாக அமையும். ஒரு நாளைக்கு 60 முதல் 90 நிமிடங்கள்வரை உடற்பயிற்சி செய்வதே போதுமானது. குடும்பத்தினருடன் பயிற்சிகள் மேற்கொள்வது உளவியல்ரீதியாகவும் பலன் அளிக்கக்கூடியதாக அமையும். வாக்கிங், ஜாக்கிங் செல்லும் 15 நிமிடங்களுக்கு முன்பு திரவ உணவு எடுத்துக் கொள்வதே சரியானது. பாலோ அல்லது ஏதேனும் ஒருவகை பழச்சாறோ... வாழைப்பழங்களும் சரியானதுதான்.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்ப நினைப்பவர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக எடுத்த உடனேயே அனைத்து கருவிகளையும் பயன்படுத்தக்கூடாது. முதல் 10 நாட்களுக்கு எளிய பயிற்சிகளிலேயே தொடங்க வேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபடும்போது தண்ணீர், ஜூஸ் சாப்பிடலாம். பயிற்சிகள் முடித்த பின்னர் முட்டையின் வெள்ளைக்கரு, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, ஆரஞ்சு, தக்காளி ஜூஸ் மாதிரியான உணவுகளைச் சாப்பிடலாம்.

குளித்து முடித்தபிறகு, மிதமான முறையில் இட்லி, நார்ச்சத்து நிரம்பிய காய்கறிகள் மற்றும் வழக்கமான உணவுகளை சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளையும் மசாலா உணவு வகைகளையும் தவிர்த்துவிடுவது நல்லது.. மேலும், ஒரேநேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. உணவுக்குப் பிறகு உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது.