ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது அவல்... புத்துணர்வை அளிக்கும்

சென்னை: அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து, நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம், அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை, அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது, கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். தனித்து உண்ணும்போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை, விதவிதமான உணவு வகைகளாக சமைத்தும் உண்ணலாம்.

சிவப்பு அவல்: சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும் சிகப்பு அவல் கொண்டு, ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன.

சிகப்பு அவல் இனிப்பு மிக பிரபலமானது. அதுபோல் சிகப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம், புட்டு போன்றவை செய்து உண்ணப்படுகிறது.

அரிசி அவல் போன்று, கம்பு அவலும் தயாரித்து விற்கப்படுகின்றன. கம்பின் சத்துக்கள் அனைத்தும் நிறைந்த கம்பு அவல் கொண்டு, உடனடி சமைக்காத உணவு வகைகள் செய்து உண்ணலாம். இனிப்பு மற்றும் கார என்றவாறும், காய்கறி துருவல்கள் இணைந்தவாறும், கம்பு அவலை தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல், தினை அவல் மற்றும் கேழ்வரகு அவல் போன்றவையும் சந்தையில் தற்போது கிடைக்கின்றன.

ஒரே மாதிரியான சிற்றுண்டி மற்றும் காலை உணவுகளை கைவிட்டு புதுமையான சிறுதானிய அவல் வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளும், உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் உதவிகரமாக இருக்கின்றன.