சிறுவயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள்

பத்து வயதில், இருபது வயதுக்குரிய உடல் தோற்றம் கொண்ட சிறுமிகள் இப்போது அதிகரித்து வருகிறார்கள். பருவம் அடைதல் என்பது ஹார்மோன் மாற்றங்களும், உடல் வளர்ச்சிகளும் ஐந்து வருடங்களாக மெல்ல மெல்ல உருவாகி, பூப்படைதலாக அரங்கேறுகிறது. பெண்கள் வயதுக்கு வரும்போது மார்பக வளர்ச்சி, ரோம வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி, உடல் உயரம் அதிகரித்தல், பூசி மொழுகுவது போன்ற தசை வளர்ச்சி போன்றவை ஏற்படுகின்றன.

சிறுமிகள் பொதுவாக 13 முதல் 15 வயதுக்குள் பூப்படைவார்கள். தற்போது 10 வயது முதலே பூப்படையத் தொடங்கிவிடுகிறார்கள். சிறுவயதிலே பெண்கள் வயதுக்கு வந்துவிடுவது, அவர்களது உடல் அளவில் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்துவதோடு சமூக அளவிலும் சிக்கல்களை உருவாக்குகிறது. உணவுகள் மூலமாகவும், இதர வழிகளிலும் உடலுக்குள் செல்லும் ரசாயனங்களே இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது லெப்டின் என்ற ஹார்மோன் அதில் இருந்து உருவாகிறது. சிறுமி, பருவமடைய தயாராகிவிட்டதை மூளைக்கு உணர்த்துவது இந்த ஹார்மோன்தான்.

சிறு வயதிலே பருவ மடைவது பற்றிய இன்னொரு ஆராய்ச்சியில், சைவ உணவை சாப்பிடுபவர்களைவிட, அசைவ உணவை சாப்பிடுபவர்களே அதிக அளவில் சிறுவயதிலே வயதுக்கு வருகிறார்கள். இதில் இருக்கும் சமூக சிக்கல் என்னவென்றால், சிறுவயதிலே வயதுக்கு வரும் பெண்கள் அதிக அளவில் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகிறார்கள். சிறு வயதிலே பருவ மடைவது மூளையில் கட்டி போன்ற நோய்களை உருவாக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

பருவமடைவதோடு, பெரும்பாலான பெண்களின் உடல் வளர்ச்சி நின்றுபோகிறது என்று சொல்லலாம். பொதுவாகவே இப்போது பெண்கள் உயரம் குறைவாக இருப்பதற்கு அவர்கள் சிறுவயதிலேயே பருவமடைந்துவிடுவதும் ஒரு காரணம். சிறுவயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். 9 முதல் 11 வயதுக்குள் பருவம் அடைபவர் களுக்கு, 12 முதல் 15 வயதுக்குள் பருவம் அடைபவரைவிட நோய் தாக்கும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம். ஒரு பெண் 14 வயதில் பருவம் அடைகிறாள் என்றால், 19 முதல் 29 வயது வரை ஆரோக்கியமான கருமுட்டை உற்பத்தியாகும்.

பத்து வயதிலே பருவ மடைந்துவிட்ட பெண், தாமதமாக திருமணம் செய்துகொள்கிறாள் எனில், அவள் கர்ப்பத்தை பற்றி முடிவெடுப்பதற்குள் அவளது கருமுட்டை ஆரோக்கியமற்றதாகிவிடக்கூடும். அதனால் அவள் குழந்தையின்மை என்ற நெருக்கடிக்கு ஆளாகவேண்டியதாகிவிடுகிறது. இதுபோன்ற பாதிப்புகளை தாய்மார்கள் உணர்ந்து, மகள்களை ஆரோக்கியமாக வளர்க்கவேண்டும். அவர்களது உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்.