மன அழுத்தத்தின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக கண்டு பிடித்து விடலாம். சோகமான விஷயத்துக்கு துக்கப்படாமலும், மகிழ்ச்சியான சமாசாரத்துக்கு சந்தோஷமடையாமலும் உர்ரென்று இருப்பார்கள். மன அழுத்தத்தை லேசானது, நடுத்தரமானது, தீவிரமானது என மூன்று வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தூக்கமும் வராது. அப்படியே தூங்கினாலும் அடிக்கடி கண் விழித்து கொள்வார்கள்.

அதிகாலையில் சீக்கிரமே எழுந்து விடுவார்கள். உறங்கும்போது 2 மணிக்கு ஒரு தடவை விழித்து சுற்றிலும் பார்த்துக் கொள்வார்கள். பசி குறைவாக இருக்கும். உடலில் சோர்வு இருக்கும். 15 சதவீதம் வரை எடை குறையும். தாம்பத்தியத்தில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். அனைவரையும் சந்தேகப்படுவார்கள். சந்தேகம் கலந்த பயம் அதிகரிக்கும். வண்டியில் பயணிக்கும்போது விபத்து ஆகிவிடுமோ என்றும், வண்டி இடித்து விட்டால் எதிராளி தாக்குவாரோ என்ற பயமும் இவர்களுக்கு ஏற்படும்.

இவர்களுக்கு மருத்துவ சிகிச்சையுடன் கவுன்சிலிங் தேவை. மூளையின் கட்டமைப்பு செயல்பாடு குறைந்தாலும் மன அழுத்தம் ஏற்படும். உயிருக்கு உயிராய் காதலித்தவர்களை பிரிந்தவர்கள், குடும்ப உறவில் அதிகமாய் அன்பு செலுத்தியவர்களை பிரிந்தவர்கள், இனிமேல் நம் வாழ்க்கை அதோகதிதானோ? என்ற பயத்தில் இருப்பவர்களும் மன அழுத்தத்திற்கு உட்படுவார்கள். காதலிக்கும் பெண்ணை, அவளது அப்பா முரட்டுத்தனமாக அடிக்கும்போது பெண்ணின் மனதில் வெறித்தனமான ஆத்திரம் மற்றும் அவமானம் ஏற்படும். இதுவும் நாளடைவில் மன அழுத்த நோயாக மாறும்.

இதேபோல் வேலை பார்க்கும் இடத்தில் உயரதிகாரிகளால் ஏற்படும் தொந்தரவும் மன அழுத்தமாக மாறும். இதனால் ஞாபகம் குறைந்து அடிக்கடி மறதி ஏற்படும். பசியும் இருக்காது. மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நேந்திரம் பழம், பால், பாலில் தயாரான உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனென்றால், இந்த உணவுப்பொருட்களில் இருக்கும் சத்துகள் மன அழுத்தத்தை குறைக்கும். வைட்டமின் பி-12, கொழுப்பு நிறைந்த இறைச்சி, கோழிக்கறி, கொழுப்பு நிறைந்த கடல் மீன்கள் சாப்பிடுவது நல்லது.