இரவிலும் இளநீரை குடிக்கலாம்... ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது

சென்னை: பகல் மட்டுமின்றி இரவிலும் இளநீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு நன்மைகள் ஏற்படுகின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இளநீர் பலரது ஃபேவரைட் பானம். தாகம் தணிப்பதோடு மட்டுமின்றி இளநீரில் இயற்கையான ஈரப்பதம், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீரேற்றத்திற்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன.

இளநீர் அல்லது முற்றிய தேங்காய் தண்ணீர் பருகுவது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மட்டுமின்றி கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவில் தூங்க செல்வதற்கு முன்பு இளநீர் பருகுவது பருவ கால நோய்த்தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக நோய் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும்போது தமனிகளுக்கு எதிராக ரத்தம் உந்தி தள்ளப்படுவதால் ஏற்படும் அழுத்தம் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடுகிறது.

இளநீர் நச்சு நீக்கும் பானமாக அறியப்படுகிறது. இதனை உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் பருகினால் ரத்த அழுத்தம் குறையத் தொடங்கும். எனினும் உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இளநீரை தவிர்த்துவிடுவது நல்லது.

திரவ வடிவம் கொண்ட இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், பொட்டாசியம் போன்றவை உள்ளன. உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு இவை அவசியமானவை. மேலும் இளநீர் இதய நோய்களை தடுக்க உதவும். அந்த அளவுக்கு இதய ஆரோக்கியத்தில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை போக்கி நீர்ச்சத்தை தக்க வைப்பதற்கு இளநீர் உதவும். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தேங்காய்த் தண்ணீர் பருகலாம். இது உடலில் இருந்து அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றும் பானமாக செயல்படுகிறது. மேலும் இந்த பானம் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு புத்துணர்ச்சியையும் தருகிறது.

சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் குறைந்தது 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள் தினமும் ஒரு வேளை உணவில் தேங்காய் நீரை சேர்த்துக்கொள்ள மறக்கக் கூடாது. இரவில் தேங்காய் நீரை பருகினால் அதில் இருக்கும் சத்துக்கள் இரவு முழுவதும் உடலில் வினை புரிந்து ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.