இயற்கை அள்ளிக் கொடுத்துள்ள பழங்களால் ஆரோக்கிய வாழ்வு வாழலாம்

சென்னை: ஒவ்வொரு பழமும் இயற்கை அன்னை நமக்கு குடுத்த வரப்பிரசாதம் தான். இதனால் நமது வாழ்வை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். பழங்களில் நோய் எதிர்ப்பு சக்திக்கான அதிகளவு வைட்டமின்கள் உள்ளன.

இயற்கையன்னை நமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது விதவிதமான சுவை மிகுந்த பழங்கள். ஆதி மனிதன் தீயின் பயன்பாட்டை அறியுமுன், சமைக்காத காய்கறி, இறைச்சி இவற்றை விட, தித்திக்கும் பழங்களையே மிக விரும்பியிருப்பான் என்பது உறுதி. வெறும் சுவைக்காக மட்டுமா பழங்கள்? இல்லை, பழங்கள் ஒரு முழு உணவாகக் கூடியவை.

சின்னச் சின்ன திராட்சையோ, மிகப்பெரிய பலாவோ, எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பழங்கள் மிக வேகமாக சீரணமாகக் கூடியவை. இவற்றைத் தனியாக உண்பதுதான் நல்லது.


இல்லையெனில், மற்ற உணவுகளை உண்ணத் தொடங்குமுன் பழங்களைச் சாப்பிட வேண்டும். வேறு எதையாவது சாப்பிட்டபின் பழங்களைச் சாப்பிடுவது நல்லதல்ல. பொதுவாக இரவில் மற்ற உணவுகளைத் தவிர்த்து, பழங்களை மட்டும் உட்கொள்வது சாலச் சிறந்தது.

‘மாதா ஊட்டாத சோற்றை மாங்கனி ஊட்டும்’ என்பது பழமொழி. கனிகளின் அரசன் எனக்கருதப்படும் மாம்பழம் முக்கனியில் முதல் கனி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதில் பழச்சர்க்கரை, புரதம் இவற்றுடன் விட்டமின் ஏ, பி, சி ஆகிய அனைத்தும் உள்ளன. மாம்பழம் இரத்த இழப்பைக் கட்டுப்படுத்தக்கூடியது. இரவில் மாம்பழமும் ஒரு குவளை பாலும் அருந்துவது உடல் நலத்தில் மிக நல்ல அபிவிருத்தியை உண்டாக்கும்.


மாம்பழத்தைத் தோலுடன் உண்பதே நல்லது, ஏனெனில் தோலில்தான் அதிக அளவு விட்டமின் சி காணப்படுகிறது. மேலும், கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரம் இதில் அதிக அளவு உள்ளது.