நூதன முறையில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து கொள்ளையடித்த 2 பேர் கைது

விழுப்புரம்: நூதன முறையில் கொள்ளை... விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளிமேடு பேட்டை பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் எடுக்கத் தெரியாதவர்களிடம் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி கார்டை மாற்றிக் கொடுத்து கும்பல் ஒன்று மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் அதே பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவரைப் பிடித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆபேல் மற்றும் முதர்ஷீர் என்பதும் ஏடிஎம்களில் மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 81 ஏடிஎம் கார்டுகளும், 48 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.