துமகூரு அருகே சிராவில் 53 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை

துமகூரு மாவட்டம் சிரா டவுனை சேர்ந்த கோவிந்தப்பா என்பவரது மனைவி விஜயலட்சுமி. விஜயலட்சுமிக்கு வயது 53 ஆகிறது. இவர்களுக்கு 11 வயதில் மகன் உள்ளான். ஆனால் அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயலட்சுமி தனது 53 வயதில் கர்ப்பம் அடைந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிராவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தன. பிறந்த இரட்டை குழந்தைகள் ஆண் குழந்தைகள் ஆகும். அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தைகள் பிறந்துள்ளது.

இதுகுறித்து அம்மருத்துவமனை டாக்டர் கூறுகையில், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தற்போது கர்ப்பமடைவது அரிதாக தான் நடக்கும் எனவும், ஆனால் விஜயலட்சுமி 53 வயதில் கர்ப்பம் அடைந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்று கூறினார்.

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு குழந்தை பிறப்பது கடினம். ஆனால் விஜயலட்சுமி 53 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர். குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.