நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம்


புதுடெல்லி:நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது ... நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இது, டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது.

நேபாளத்தில் நேற்று பிற்பகல் 2.25 மணிக்கு 4.6 ரிக்டர் அளவிலும் இதையடுத்து 2.51 மணிக்கு 6.2 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கங்கள் சுமார் 1 நிமிடம் நீடித்தன. முதல் நிலநடுக்கம் பூமியில் 10 கி.மீ. ஆழத்திலும் 2-வது நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலநடுக்கம் டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் நேற்று வலுவாக உணரப்பட்டது. டெல்லியில் இந்நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர்.

இதனை அடுத்து வீடுகளில் இருந்தவர்களும் அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களும் அவசர அவசரமாக தெருவுக்கு ஓடி வந்தனர். நேபாளத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் இல்லை