நைஜீரியாவில் உள்ள விவசாய பண்ணையில் குண்டுவெடித்து 5 சிறுவர்கள் பலி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் காட்சினா மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள யம்மாமா என்ற கிராமத்தில் விவசாய பண்ணை ஒன்று உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர், கால்நடைகளுக்கு புல் அறுக்க பண்ணைக்கு சென்றுள்ளனர்.

புல் அறுக்க பண்ணைக்கு சென்ற சிறுவர்கள் பண்ணையில் உள்ள ஒரு மரத்துக்கு அடியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனை அங்கு யாரும் எதிர்பாரக்கவில்லை.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 6 சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். அதன்பின் அங்கிருந்தவர்கள் காயமடைந்த சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பண்ணையில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.