ஹாங்காங் பிரச்னைக்கு ஆஸ்திரேலியா பிரதமர் கடும் கண்டனம்

ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம்... சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்படும், ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

சீன அரசு, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம்.

அத்துடன் சீனாவுக்கு நாடு கடத்தவும் சட்டத்தில் இடமுள்ளதாக கூறப்படுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதன் முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டம் கவலை அளிக்கிறது. பல வாரங்களுக்கு முன்பாகவே, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்படுவோருக்கு, அடைக்கலம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கத் துவங்கி விட்டது. இது குறித்து இறுதி முடிவு எடுத்த பின், முறையாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஹாங்காங்கில் பிரிட்டனைச் சேர்ந்த 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என, பிரிட்டன் அறிவித்துள்ளது.