பங்காரு அடிகளார் மறைவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவிப்பு


சென்னை: நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பங்காரு அடிகளாரின் மறைவை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கக்ப்பட்டுள்ளதாவது:- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்.

இதையடுத்து கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய பங்காரு அடிகளார் அவர்களது மறைவு, நமது சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரின் ஆன்மீக அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்னையின் அவதாரமாக நம்மிடையே வாழ்ந்து முக்தியடந்த அவரது பிரிவைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் அம்மன் வழங்கட்டும் ஓம் சாந்தி என்று பதிவிட்டு உள்ளார்.

இவரை தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் திரு.பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய அன்னை ஆதிபராசக்தியை பிரார்த்திக்கிறேன் ஓம் ஷாந்தி என எக்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.