மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்க இடங்களை தாண்டாது - பிரசாந்த் கிஷோர் சவால்

மேற்குவங்காள மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இதற்காக திரிணாமூல் காங்கிரசும், பா.ஜ.க.வும் வரிந்து கட்டி தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளன. மேற்குவங்காள மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பெரிய அரசியல் தலைவராகக் கருதப்படும் சுவேந்து அதிகாரியை பா.ஜ.க.வுக்கு வரவேற்றார்.

அடுத்த ஆண்டு மேற்கு வங்காள மக்கள் வாக்களிக்கும் போது மம்தா தனித்து விடப்படுவார். மம்தாவின் அரசியலை வன்முறை, ஊழல் ஆட்சி. மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் மக்களைச் சென்றடைய விடாமல் மம்தா ஆட்சி தடுக்கிறது. விவசாயிகளுக்கான மத்திய அரசின் நிதிகளையும் மம்தா பானர்ஜி தடுத்து வருகிறார், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தையும் அவர் தடுத்துள்ளார்.

மத்திய அரசின் 80 நலத்திட்டங்களை மம்தா இதுவரை தடுத்துள்ளார். 294 உறுப்பினர்களுக்கான மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 200 இடங்களுக்கும் மேல் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என அமித் ஷா தெரிவித்தார். இந்நிலையில், மம்தா பானர்ஜியால் பிரசாரம் உள்ளிட்ட உத்திகளுக்காக நியமிக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தைக் கடந்து வெற்றி பெற்றால் சமூக வலைத்தளத்திலிருந்து தான் வெளியேறுவேன் என சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆதரவளிக்கும் ஊடகங்களின் ஊதிப்பெருக்கல்களுக்கு மத்தியில் பா.ஜ.க. உண்மையில் இரட்டை இலக்கத்தைக் கடக்கவே சிரமப்படும். இந்த டுவிட்டர் பதிவை பாதுகாத்து வையுங்கள். ஏனெனில் நான் கணிப்பதற்கு மேல் பா.ஜ.க. இடங்களைக் கைப்பற்றினால் நான் சமூக ஊடகத்திலிருந்து வெளியேறுவேன் என பதிவிட்டுள்ளார்.