10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை முடக்க ஒளிப்பரப்பு அமைச்சகம் உத்தரவு

புதுடில்லி: ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவு... புலனாய்வு அமைப்புகளின் கூற்றின் அடிப்படையில், 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 விடியோக்களை முடக்குமாறு யூடியூப்பிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டது.


தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட விடியோக்களைத் தடுப்பதற்கான உத்தரவு செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. முடக்கப்பட்ட விடியோக்கள் இதுவரை ஒரு கோடியே முப்பது லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இது, மத ரீதியாக வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பகிரப்பட்ட போலி செய்திகள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட விடியோக்களே.


சில சமூகங்களின் மத உரிமைகளை அரசு பறித்துள்ளது என்பது போன்ற தவறான கூற்றுகள், மத சமூகங்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்கள், போன்றவற்றை எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகத்தால் தடுக்கப்பட்ட சில விடியோக்கள், அக்னிபத் திட்டம், இந்திய ஆயுதப் படைகள், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு அமைப்பு, காஷ்மீர் போன்றவற்றில் தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய காணொலிகள் நாட்டில் மத நல்லிணக்கத்தையும், பொது ஒழுங்கை சீர்குலைக்கும் திறன் படைத்தது என கண்டறியப்பட்டது.

சில விடியோக்கள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுடான இந்தியாவின் வெளிப்புற எல்லையை தவறாக சித்தரித்தன. இந்நிலையில், அமைச்சகத்தால் முடக்கப்பட்ட விடியோக்கள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான இந்தியாவின் நட்புறவு, நாட்டில் பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் அவற்றை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.