தென் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து இருக்கிறது. வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களான விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறினார்.