பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன் .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி ... தென் மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, மேலும் கோயில் சொத்துகளையும், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது என தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து பிரதமரின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிரதமருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்? எதைத் தவறு என்கிறார் பிரதமர் ? - பிரதமர் பார்வையில் தான் தவறு இருக்கிறது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா? வரலாற்று சிறப்புமிக்க 112 கோயில்களை சீர்செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தது தவறா? 2 ஆண்டுகளில் ரூ.3,50 கோடி மதிப்பிலான கோயில்கள் மீட்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், அந்தமான், தெலங்கானா என்று எங்கு போனாலும் தமிழ்நாட்டை பற்றித்தான் பேசுகிறார். பிரதமரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

ஒரு மாநில அரசின் செயல்பாடு பற்றி இன்னொரு மாநிலத்தில் பேசுவது முறையா? தர்மமா? பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான, அவதூறு செய்தியை சொல்வது சரியா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.