தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

மத்திய அரசு இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியை போக்க ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களைச் சேர்ந்த கார்டுதாரர்கள் தமிழகத்தில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்றால் அங்குள்ள ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.

இதற்காக ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை கருவி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டை ஸ்கேன் செய்து அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நாளை முதல் கைரேகை பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும்.

ஒவ்வொரு ரே‌ஷன் கார்டிலும் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே ரே‌ஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க இயலும். இதற்காக ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் கைரேகை பதிவு செய்யும் வசதியுடன் கூடிய நவீன பாயிண்ட்ஆப் செயல் கருவி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரே‌ஷன் கடைகளுக்கும் கைரேகை பதிவு செய்யும் கருவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், செல்லூர் ராஜூ மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ள ரே‌ஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து அரிசி, கோதுமை வாங்கி கொள்ளலாம். இதற்காக அவர்களிடம் மத்திய அரசு நிர்ணயித்துள்ள தொகை வசூலிக்கப்படும். இதே போல் மற்ற மாநிலங்களில் உள்ள தமிழக கார்டுதாரர்களும் அங்குள்ள ரே‌ஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.