உடன்குடி அனல்மின்நிலையத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று

உடன்குடி கல்லாமொழி பகுதியில் அனல்மின்நிலையம் மற்றும் துறைமுகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று தாக்கம் தீவிரமாக இருந்த போது ஏராளமான வடமாநில ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

தற்போது மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததையடுத்து மீண்டும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் அனல்மின்நிலையம் அமைக்கும் பணிகள் மீண்டும் தீவிரமாக நடந்து வருகிறது.


இந்நிலையில் அனல் மின்நிலையவளாகத்தில் பணியாற்றும் 37, 55, 42, 32, 45 வயது வடமாநில தொழிலாளர்கள், சுந்தரபுரத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதாரத்துறையினர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அனல் மின்நிலைய வளாகத்தில் தங்கி பணியாற்றி வரும் அனைத்து வடமாநில தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.