வெளிமாவட்ட, மாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே கொரோனா பரவல்; திருப்பூர் கலெக்டர் தகவல்

97 சதவீதம் வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமே கொரோனா தொற்று பரவி உள்ளது என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து தற்போது 541 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குமார் நகர் பகுதியில் மாநகர சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காய்ச்சல் கண்டறியும் முகாமினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது அவர் கூறியதாவது: திருப்பூரில் 97 சதவீதம் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவி உள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாநகராட்சி முழுவதும் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை தவிர்க்கும் வகையில் அத்தியாவசிய அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியூர்களில் இருந்து திருப்பூர் வருபவர்களுக்கு இ-பாஸ் முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.