அரியானாவில் கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது

சண்டிகர்: இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. அரியானாவிலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது.

இதனை அடுத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தொற்று பாதிப்பு அதிகரிப்புக்கு மத்தியில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதாக அரியானா மாநில சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் 100க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹரியானாவின் அனைத்து பகுதிகளிலும் இது செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.