மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,380 ஆக உயர்வு; முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 4,085 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 295 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக வருகிற 12-ந் தேதி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 4,085 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 295 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,380 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,048 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 62 பேர் உயிரிழந்துள்ளனர்.