போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேருக்கு மரண தண்டனை; மக்கள் எதிர்ப்பால் ஈரான் அரசுக்கு நெருக்கடி

ஈரான் அரசுக்கு நெருக்கடி... கடந்த 2019 - ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது ஈரான் உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் பொதுமக்கள் போராடத் தொடங்கி உள்ளதால் ஈரான் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஈரானில் பொருளாதாரத் தேக்க நிலை நீடித்து வருகிறது. ஈரானின் பண மதிப்பு குறைந்து, பணவீக்கமும் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகமாகியுள்ளது.

இந்த பொருளாதார பிரச்னையை சரி செய்ய ஈரான் அரசு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலையை ஐம்பது சதவிகிதம் வரை உயர்த்தியது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 18 - க்கு விற்ற பெட்ரோல் ரூ.27 ஆக விலை உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல்லாயிரக் கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து சென்ற அமிர் ஹூசைன் மொராடி, சயீத் டாம்ஜிடி மற்றும் மொஹம்மத் ராஜாபி ஆகிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த ஈரான் உச்ச நீதிமன்றம் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை உறுதிப்படுத்தி, மரணதண்டனையை விதித்தது. மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூன்று பேருக்கும் ஆதரவாக ஈரானில் மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

மூன்று பேரையும் விடுவிக்கக்கோரி பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் #StopExecutionsinIran, #Don’t_Execute என்று பல்வேறு ஹேஸ்டேக் களை டிரெண்டிங் செய்து வருகிறார்கள். ”எதிர்காலத்தில் ஈரான் அரசுக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று கருதுகிறது. போராட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்திலேயே அப்பாவி இளைஞர்கள் மூவருக்கும் மரணதண்டனை விதித்துள்ளது” என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டித்துள்ளனர்.

ஈரான் அரசுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், பொதுமக்களும் நேரடியாக மூன்று பேரின் மரண தண்டனைக்கு எதிராகப் போராடத் தொடங்கியுள்ளனர். இது ஈரான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.