கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டதாக துணை முதல்-மந்திரி அறிவிப்பு

கர்நாடகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா தாக்கம் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் பெங்களூரு விதானசவுதாவில் கொரோனா தடுப்பு பணிக்கான செயல்படை கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகப்படுத்துவது, ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிப்பது குறித்தும், அதற்கு தேவையான உபகரணங்களை வாங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்தபின் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி அளித்தபோது, மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.1,500 ஆக குறைக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் அவர், தனியார் மருத்துவமனைகளில் தற்போது ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனிமேல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.2,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஆன்டிஜென் பரிசோதனைக்கான உபகரணங்கள் வாங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூச்சு திணறல் போன்ற உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.