செட்டிநாடு குழும நிறுவனங்களில் 2ம் நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: 2ம் நாளாகவும் சோதனை... வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்ததாக எழுந்த புகாரில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் செட்டிநாடு குழுமம் சார்பில் சிமெண்ட் தொழிற்சாலை, மின் உற்பத்தி, நிலக்கரி நிறுவனம், மருத்துவ பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், போக்குவரத்து, செக்யூரிட்டி நிறுவனம் என பல்வேறு தொழில்கள் நடத்தப்படுகிறது.

இந்த குழுமம் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக புகார் எழுந்ததால் சென்னை அண்ணா சாலை ராணி சீதை அரங்கம், எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி சாலை அலுவலகம் என 6 இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வெளிநாடுகளில் பண பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள், முதலீட்டு பத்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் எழும்பூர் அலுவலக வளாகத்தில் மட்டும் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தும் சோதனை நீடித்து வருகிறது. செட்டி நாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.