அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி... தஞ்சையில் வாலிபர் கைது

தஞ்சாவூர்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.58 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (45). இவர் நிலையான வேலையில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாங்கித் தருகிறேன். அதற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று பிரான்சிஸ் சேவியரிடம் கூறினார்.

இதனை உண்மை என்று நம்பிய பிரான்சிஸ் சேவியர் ரூ.58000-த்தை ராஜ்குமாரிடம் கொடுத்தார். அடுத்த சில நாட்களில் ஒரு பணி நியமன ஆணையை தயார் செய்து பிரான்சிஸ் சேவியரிடம் கொடுத்தார். அந்த ஆணையை எடுத்துக்கொண்டு நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு சென்று கொடுத்துள்ளார் பிரான்சிஸ் சேவியர்.

இதனை வாங்கி பார்த்த அதிகாரிகள் இது போலி பணி நியமன ஆணை என்று கூறினர். அப்போது தான் தன்னை ராஜ்குமார் ஏமாற்றியதை பிரான்சிஸ் சேவியர் உணர்ந்தார். இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.