இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும்; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு முக்கிய தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களின் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவும் பஸ் போக்குவரத்து அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த முக்கிய தளர்வுகளில் ஒன்றாக மாவட்ட எல்லைகளுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் மாவட்ட எல்லைகளுக்குள் பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் 161 நாட்களுக்கு பின் பஸ்கள் மீண்டும் இயங்க தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:- மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக எல்லையிலுள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும். இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அறிகுறி இருந்தால் மட்டுமே ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது. அரசு பேருந்துகளில் பழைய மாதாந்திர பாஸ் செப்டம்பர் 15ந்தேதி வரை செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.