தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகளுக்கான அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக விரைவில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என்றும், சென்னையில் மட்டும் 400 நகரும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது நடமாடும் ரேஷன் கடைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது:-

தமிழகத்தில் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 3,501 ரேஷன் கடைகள் அமைக்கப்பட உள்ளன. இதனால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட் குடும்ப அட்டைதாரர்கள் பலன் பெறுவார்கள்.

ரேஷன் கடைகள் செயல்படும் இடம், நேரம் ஆகியவற்றை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அரசு கட்டடம், உள்ளாட்சி கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகளை திறக்கலாம்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆகஸ்டு 20-ம் தேதிக்குள் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் அறிக்கை தரவேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.