தன் உயிரை கொடுத்தது... எஜமானியின் உயிரை காத்து விசுவாசத்தை காட்டிய வளர்ப்பு நாய்

எஜமானியின் வீட்டு மீது வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டை கவ்விச் சென்று தன் உயிரை இழந்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளது விசுவாசமிக்க நாய்.

மதுரை அருகே தன் தம்பியை குடிக்க அழைத்து சென்றவரை திட்டிய பெண்ணின் வீட்டு மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த பெண் வளர்த்த நாய் ஒரு குண்டு கவ்வி எடுத்துக் கொண்டு ஓடியது. அப்போது வெடிகுண்டு வெடித்து தலைசிதறி நாய் இறந்தது.


மதுரை பாலமேடு அருகே ராமகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் செல்வராணி. இவரது தம்பியை அதே பகுதியை சேர்ந்த சின்னராசு என்பவர் அடிக்கடி மது குடிக்க அழைத்து சென்றுள்ளார். இதை செல்வராணி கண்டித்துள்ளார்.

இதனால் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சின்னராசு தான் வீட்டில் வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்து பற்றவைத்து செல்வராணி வீட்டின் மீது வீசியுள்ளார். இதில் ஒரு வெடிகுண்டு வெடித்துள்ளது. அப்போது செல்வராணி வளர்க்கும் நாய் தன் எஜமானியை காப்பாற்ற வெடிகுண்டில் ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது.

அப்போது வெடிகுண்டு வெடித்ததால் நாய் தலை சிதறி இறந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர்.