வடகர்நாடகத்தில் தொடரும் கனமழை...மழை வெள்ளத்திற்கு 5,500 வீடுகள் சேதம்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக வடகர்நாடக பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன்காரணமாக அணைகளில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா மலகானஹள்ளி பகுதியில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த ஆற்றில் துணி துவைக்க சென்ற 16 வயது சிறுமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அந்த சிறுமியின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தீயணைப்பு படையினரும், போலீசாரும் தேடிவருகின்றனர். இதுபோல ராய்ச்சூர் அருகே ஆடு மேய்க்க சென்ற ஒருவரும் கிருஷ்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

கர்நாடகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் இதுவரை மழை, வெள்ளத்திற்கு 19 பேர் இறந்து உள்ளனர். 63 கால்நடைகள் செத்து உள்ளன. மழை, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்காக மாநில அரசு 104 நிவாரண முகாம்களை தொடங்கி உள்ளது. இந்த முகாம்களில் 3,810 பேர் தங்கி உள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு கர்நாடகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் இதுவரை மழை, வெள்ளத்திற்கு 5,500 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் 216 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்து உள்ளன. 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. 50 ஆயிரம் ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் சேதம் அடைந்து உள்ளன. இதனையடுத்து வடகர்நாடக பகுதிகளில் தீவிரமாக மீட்பு பணி நடந்து வருகிறது.